கோவை: சென்னையில் நடைபெற்ற சீரமைக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை தொடர்பான ஆலோசனை இன்று நடைப்பெற்றது.
இன்று சென்னையில் நடைபெற்ற சீரமைக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கொடிசியா தலைவர் எம்.வி. ரமேஷ் பாபு கலந்துகொண்டார்.
தமிழக அரசின் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன், ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.
அன்பரசன், வி.அருண் ராய, இ.ஆ.ப,
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலாளர், எஸ்.கிருஷ்ணன், இ.ஆ.ப.
நிதித் துறை, கூடுதல் தலைமைச் செயலாளர், சிஜீ தாமஸ் வைத்தியன், இ.ஆ.ப தொழில்துறை ஆணையர், ஆர். கஜலட்சுமி, இ.ஆ.ப. மேலாண்மை இயக்குநர், சிட்கோ, ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கொடிசியா தலைவர் பேசும் போது தமிழக அரசு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவதற்கும் தொடர்ச்சியாக அது குறித்த கூட்டங்களை நடத்துவதற்கும் தமிழக முதல்வர், அமைச்சர்கள் மற்றும் தமிழக அரசின் அதிகாரிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
மேலும் கீழ்க்கண்ட கோரிக்கைகளை சமர்ப்பித்தார்.
தகுதி உள்ள அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் மூலம் கோவிட் தடுப்பூசிகள் முன்னுரிமை அளித்து உடனடியாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி
•தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் போன்ற மாநில நிதி நிறுவனங்களின் கடன் தொகை மேலும் 6 மாதங்களுக்கு திருத்தி அமைக்கப்பட்டு பொதுமுடக்க காலத்திற்கு வட்டி தொகை தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
•தமிழகத்தில் உள்ள அனைத்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் எவ்வித பிணையும் இன்றி 3 கோடி ரூபாய் கூடுதலாக மூன்று ஆண்டு காலத்திற்கான கடன் உதவி வழங்குவதோடு ஏற்கனவே தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக வாடிக்கையாளராக உள்ள நிறுவனங்களுக்கு ஓராண்டு கால கடன் விடுப்பு காலம் வழங்கப்படவேண்டும்.
•தொழிற்சாலைகளின் மேம்பாட்டுக்கான தற்போது உள்ள சிப்காட் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டைகளில் வழங்கப்படும் அனைத்து சலுகைகள், மானியங்களும் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் உடைய தொழிற்பேட்டைகளுக்கும் விரிவாக்கப்பட வேண்டும்.
•கோயம்புத்தூரில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்ற அனைத்து உற்பத்தி சார்ந்த (புதிய மற்றும் விரிவுபடுத்தப்படும்) தொழிற்சாலைகளுக்கும் 30% சிறப்பு முதலீட்டு மானியம் அளிக்கப்பட வேண்டும்.
•தமிழக அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் சட்டத்தின்படி கீழ்க்கண்ட முக்கிய தொழில்துறைகளுக்கு 25% முதலீட்டு மானியம் வழங்கப்பட வேண்டும்.
•ஆட்டோமொபைல்
•சூரிய ஒளி தகடுகள்
•தோல் தொழிற்சாலை
•மின்சார உதிரிபாகங்கள், உற்பத்தி தொழில்சாலை
•பம்ப் மோட்டார் தயாரிப்பாளர்கள்
•ஐவுளி இயந்திர பாகங்கள் தயாரிப்பாளர்கள்
இந்த நிதியானது கோயம்புத்தூரைவிட மற்ற நகரங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கோயம்புத்தூரில் தான் சிறு குறு மற்றும் நடத்த தொழிற்சாலைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி (சிட்பி) 2019 மார்ச் மாதம் வரையிலான தகுதியுள்ள கடன் விண்ணப்பங்களுக்கு தான் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஏராளமான சிறு குறு மற்றும் நழுத்தர தொழிற்சாலைகள் கடன் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் வங்கியானது புதிய கடன் உதவி பெறுவோருக்கு மானிய உதவி இல்லை என்று அறிவித்துள்ளது.
•ரொக்க கடன் வசதி உள்ளிட்ட அனைத்து கடன் தொகைளுக்கும் 31.03.2022 வரை மேலும் ஓராண்டு வட்டி தொகை தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
•பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் உள்ள அரசு துறை நிறுவனங்கள் சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு நிலுவையில் வைத்துள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
•உற்பத்தியை ஊக்குவிக்கவும், அதிகரிக்கவும் உதவும் வகையில் அனைத்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு Interest Subvention Charges 6% ஆக நீட்டிக்கப்பட வேண்டும்.
•சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் தொகை செலுத்த இயலாத சூழல் ஏற்படும்போது அதற்கான வட்டி மற்றும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
•தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டம், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்துவதற்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
•அரசு துறைகளில் கெடுபிடி தவிர்க்கப்பட்டு ஒவ்வொரு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தன் உறுதி சான்றிதழ்கள் மதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான்
•1994ல்
இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் திருத்தி அமைக்கப்பட வேண்டும். தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு புதிய மாஸ்டர் பிளான் வெளியீடு விரைவுபடுத்தப்பட வேண்டும்.
ஒற்றைச்சாளர அனுமதி
•நகர ஊரமைப்பு இயக்குநர், உள்ளூர் திட்ட குழுமம் மற்றும் வீட்டு வளர்ச்சி துறை ஆகியோரிடம் கட்டிடங்களுக்கான முறையான அனுமதி பெறுவதை விரைவுபடுத்தும் வகையில் தகுந்த மென்பொருளுடன் ஒற்றைச்சாளர அனுமதி முறை அறிமுகப்படுத்தபட வேண்டும்.
•இதன் மூலம் தொழிற்சாலை கட்டுமானங்களுக்கு தேவையான தெழிற்சாலை நில் வகைப்பாடு குறித்த விண்ணப்பங்கள் மற்றும் அனுமதிகள் பெறுவது தாமதமாகாமல் விரைவுபடுத்த முடியும்.
செலுத்தப்பட வேண்டிய தொகைகள்
•மின்சார கட்டணம், சொத்துவரி, தொழில்வரி, உரிமத்தொகை, மாசுகட்பாடு வாரிய கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலுத்தவேண்டிய தொகைகளும் மேலும் 6 மாதங்களுக்கு 31.03.2022 வரை எவ்விதமான வட்டி மற்றும் நடவடிக்கைகளில் இன்றி தள்ளி வைக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் பணியாளர்கள் எனும் மனிதவளத்தை வலுப்படுத்துதல்
•நமது மாநிலம் பெரும்பான்மையாக மற்ற மாநிலங்களின் குறிப்பாக, வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பணியாளர்களை நம்பி இருப்பதை கோவிட் பெருந்தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலைகள் தெளிவாக எடுத்துக்காட்டின. மற்ற மாநிலத்தை சார்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்பிய பொழுது தொழிற்சாலைகள் கிட்டத்தட்ட இயங்காமல் நின்று போயின.
•நமது மாநிலத்தில் தற்போது உள்ள தகுதியான பணியாளர்களை திறன்மிக்கவர்களாக மாற்றுவதற்கான ஒரு சிறப்பு திட்டம் வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் அரசுடன் ஒத்துழைக்க எப்பொழுதும் தயராக உள்ளோம்.
•அந்தந்த தொழிற்சாலை வளாகங்களில் புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களின் தங்குமிடம் வசதியை உருவாக்கிட மானியங்களை அனுமதிக்க வேண்டும்.
திறன்மேம்பாட்டு மையங்கள்
•தேவையான திறன்களுடன் கூடிய போதுமான மனிதவளத்தை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்றிட உதவும் வகையில் திறன்மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
•ஊரக மேம்பாட்டு துறை, மாவட்ட தொழில் மையம் மற்றும் திறன்மேம்பாட்டு மையத்தை உருவாக்கும் அமைப்பு இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட்டு ஊரக பகுதியில் உள்ள பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
•மாநில அரசு திறன்மேம்பாட்டுக்கான 90% நிதி வழங்க வேண்டும்.
•ஊரக பகுதி தொழிலாளர்களுக்கு பயிற்சி காலத்திற்கான உதவி தொகை மற்றும் தங்குமிடம் வழங்கப்பட வேண்டும்.
•மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பணி புரிவோரை தொழிற்சாலைகளில் பணி அமர்த்துவதன் மூலம் தொழில்சாலைகளில் தொழிலாளர் தேவை ஓரளவு நிறைவு செய்யப்படும்.
125 KVA மற்றும் அதற்கு மேற்பட்ட திறன்படைத்த டீசல் ஜெனரேட்டர்களுக்கு தேவையான மாசுக்கட்டுப்பாட்டு கருவிகள்
•முன்பு இருந்த மின் தட்டுப்பாடு சிக்கல் அரசாங்கத்தால் தீர்க்கப்பட்டுவிட்டது. தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு மின்சார ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ள மின்மிகை மாநிலமாக மாறி உள்ளது. ஏராளமான காற்றாலைகள் மற்றும் சூரியஒளி மின்சார தயாரிப்பு கருவிகள் மூலம் பசுமை ஆற்றல் உற்பத்தி இங்கு அதிகரித்துள்ளது.
•தற்போது உள்ள நிலையில் ஒரு மாற்று ஏற்பாடாக குறுகிய நேரத்திற்கே ஜெனரேட்டர்கள் தேவைப்படுகின்றன. டீசல் விலை உயர்வு காரணமாக பொருளாதார ரீதியிலும் இதன் பயன் குறைந்து வருகிறது.
•இந்த நிலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பட்டு வாரியம் இதுகுறித்து எடுத்துவரும் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு ஆவனம் செய்ய வேண்டும்.
இராணுவ தளவாட உற்பத்தி பொருட்களுக்கான சோதனை மற்றும் உள்கட்டமைப்பு திட்டம்
•மேற்சொன்ன திட்டத்தின்கீழ் இராணுவ தளவாட உற்பத்தி துறை தமிழகத்தின் 400 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு இராணுவ தளவாட சோதனை மையத்தை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த மையம் அமைவதற்கு கோயம்புத்தூர் ஏற்ற இடமாகும்.
•இந்திய முப்படைகளுக்கு தேவையான உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்ய உதவும் வகையில் அமையும் இந்த மையத்தின் திட்டச் செலவான 400 கோடி ரூபாயில் மத்திய அரசாங்கம் 75% மேற்சொன்ன திட்டத்தின்கீழ் வழங்குவதால் மீதி உள்ள 25% நிதி உதவியை வழங்குமாறு மாநில அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
•பெரும் நிறுவனங்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிய ஸ்டார்ட் அப்கள் இந்த சோதனை மைய வசதியை பயன்படுத்திக்கொண்டு தங்கள் உற்பத்தி பொருட்களை இராணுவத்திற்கு வழங்குவதற்கான சான்றிதழைப் பெறமுடியும்.
ஆற்றல்
•தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ள 15% தீர்வை குறித்து மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். அதில் வருமானம் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழும்பத்தினர் ஆகியவையும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
•காற்றாலை உற்பத்தி மற்றும் சூரியஒளி உற்பத்திற்கான நிலுவையில் உள்ள தொகையை விரைந்து வழங்குவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
•24*7 ஆற்றல் தேவையை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் தயராக இருக்க வேண்டும்.
உட்கட்டமைப்பு
•கோவையில் 1000 முதல் 1500 ஏக்கர் வரை பரப்புள்ள ஒரு மாபெரும் தொழிற்பேட்டை வளாகம் சிட்கோவால் உருவாக்கப்பட வேண்டும்.
•கோயம்புத்தூர் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் மையமாக இருப்பதால், கோவையைச் சுற்றி உள்ள 100 கி.மீ பரப்பளவில் பெரும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.
கோயம்புத்தூர் - மதுரை, கோயம்புத்தூர் - ஓர் தொழில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட வேண்டும்.
•சிறுதொழிற்சாலைகளின் நலன் கருதி, தமிழகத்தில் மாடி மற்றும் பல அடுக்கு தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட வேண்டும்.
•கோயம்புத்தூர் - ஓசூர் தொழில் வழிதடத்தை மேம்படுத்துவதன் மூலம் தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3 ஆண்டுகளில் இருமடங்காகும்.
•தமிழ்நாட்டில் இராணுவ தொழில்வழித் தடத்தை மேம்படுத்துவதன் மூலம் சென்னை, கோவை, சேலம், திருச்சி, ஓசூர் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு மேம்பட முடியும்.
•இன்றைய சூழலில் கோயம்புத்தூருக்கு புறநகர் ரயில் சேவை அளிக்கும் மெட்ரோ ரயில்கள் தேவைப்படுகின்றன.
•தற்போது நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள், சரக்கு முனையங்களை நவீனப்படுத்துதல், ரயில் நிலையங்களை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை விரைவுபடுத்த வேண்டும்.
•மேற்கு பைபாஸ் சாலையை உருவாக்க வேண்டும்.
•கொச்சின் எல்லை சாலை - பல்லடம் முதல் மதுக்கரை வரை உள்ள சாலை அகலப்படுத்தப்பட்டு நான்கு வழிச்சாலையாக்கப்பட வேண்டும்.
•பல்லடம் முதல் சிந்தாமணிபுதூர் வரையிலான சாலை அகலப்படுத்தப்பட்டு நான்கு வழிச்சாலை ஆக்கப்பட வேண்டும்.
•சத்தியமங்கலம் சாலை அகலப்படுத்தப்பட்டு குரும்ப்பாளையத்தில் இருந்து நான்கு வழிச் சாலையாக்கப்பட வேண்டும்.
•நகர எல்லைக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பேருந்து முனையம் அமைய முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
கீழ்க்கண்ட இருவழி சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக தரம் உயர்த்தப்படுவதால் வாகனப் போக்குவரத்து எளிதாகும்.
•கோயம்புத்தூர் - சத்தியமங்கலம் NH 948
•கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் NH 181
•எல் அண்டு டி பைபாஸ் சாலை, நீலம்பூர் முதல் மதுக்கரை வரை NH 544
தேவையான மேம்பாலங்கள்
•சிங்காநல்லூர், திருச்சி சாலை NH 81
•சுந்தராபுரம், பொள்ளாச்சி சாலை NH 83
•சரவணம்பட்டி, சத்தி சாலை NH 948
•துடியலூர், மேட்டுப்பாளையம் சாலை NH 181
நகர ரயில் சேவை
•ஏற்கனவே உள்ள உட்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி, இருகூர், கோயம்புத்தூர் சந்திப்பு, போத்தனூர், பிறகு மீண்டும் இருகூர் வரும் வகையில் அமையும் நகர ரயில் தடம் சாலை போக்குவரத்தை குறைக்கும்.
•கோவையில் இருந்து 100 கி.மீ தொலைவை இணைக்கும் வகையில் ரயில் சேவைகள் மூலம் ஈரோடு, பழனி, ஷோரனூர் போன்ற ஊர்களுக்கு புறநகர் ரயில் சேவை அளிக்கலாம்.
•அறிவியல், தொழில்நுட்பம், வடிவமைப்பு, நிர்வாகம், போன்ற துறைகளில் உயர்கல்வி நிறுவனத்தை கோவையில் அமைக்க வேண்டும்.
நில கையகப்படுத்துதல் சட்ட அறிமுகம்
•ஆந்திரப் பிரதேசத்திலும் குஜராத்திலும் உள்ளது போல் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அரசு ஆணை பிறப்பிப்பது மட்டுமே தற்போதுள்ள முறையாக உள்ளது. தொலைநோக்குதல் தமிழக மக்களின் பயன் கருத் இந்த புதிய சட்ட அறிமுகம் தேவைப்படுகிறது.
விமான நிலைய விரிவாக்கம்
•இந்தியாவில் முதல் இருபது விமான நிலையங்களில் ஒன்றாக கோயம்புத்தூர் விமான நிலையம் இயங்கி வருகிறது. கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு 650 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. தேவையான நிலத்தை கையகப்படுத்தி விரிவாக்க பணியை விரைந்து செய்து தர வேண்டுகிறோம்.
•இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஏர்லங்கா, ஏர் அரேபியா அண்டு எமரேட்ஸ் போன்ற நிறுவனங்கள் இங்கிருந்த சர்வதேச விமான சேவை அளிக்க தயாராக உள்ளன. அதற்கு கோவை விமான நிலைய ஓடுபாதை அதற்கேற்ப அகலப்படுத்தப்பட வேண்டும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டிட மேம்பாட்டு விதிகள்
•தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டிட மேம்பாட்டு விதிகளுக்கு இடையே உள்ள விதிகளில் உள்ள முரண்பாடுகள் கட்டுமானம் மற்றும் அதில் ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்து சிக்கல்களை உருவாக்குகின்றன. எனவே இந்த விதி முரண்பாடுகள் களையப்பட சீராக்கப்பட வேண்டும்.
•தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் கோவையில் அமைக்கப்பட வேண்டும்.
•அனுமதிக்கான விண்ணப்ப கட்டணம், உட்கட்டமைப்பு கட்டணம், காப்புத் தொகை மற்றும் மாசுகட்டுப்பாட்டு கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும்.
•தமிழக ரியல் எஸ்டேட் தொழில் சார்ந்த பொருளாதாரத்தில் எதிர்மறைத் தாக்கம் காணப்படுவதால், இது சார்ந்த பல்வேறு அரசு கட்டணங்களை குறைப்பதன் மூலம், வாடிக்கையாளருக்கு குறைந்த விலையில் அளிக்க முடியும்.
•இராணுவ தொழில்வழித் தடம் மற்றும் தொழில் வளர்த்தெடுப்பு, மையங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வருதல், வேளாண் பொருட்கள் கூடங்கள் மற்றும் குளிர்பதன சேகரிப்பு கூடங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.
•அனைத்து தொழில் அமைப்புகளும் தரும் கோரிக்கைகளை பரிசீலித்து நடைமுறைப்படுத்துவதற்கு, ஒரு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவது பலவகையிலும் பயன் தருவதாக அமையும்.
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் இந்த கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு அளித்த அமைச்சர் அவர்களுக்கு கொடிசியாவின் சார்பில் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்ந்து உங்கள் நல் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.